<$BlogRSDUrl$>

மீன் வளம் நிறைந்த தமிழீழம் இன்று அதன் நிலமை படு மோசம் -------------------------------------------------------------------------------------- தென் ஆசியாவிலேயே கூடுதலான வளவாய்ப்பை இலங்கைதான் கொண்டிருக்கின்றது. அதில் தென் இலங்கையை விட வடக்குக் கிழக்குத்தான் மிகவும் வாய்ப்பான சமுத்திரவியற்காரணிகளைக் கொண்டிருக்கின்றது. இலங்கையின் மொத்த கரையோர நீளம்1739 கிலோ மீற்றர்கள் இதில் 1162 கிலோ மீற்றர்கள் அதாவது 67 சதவீதம் எங்களுக்குரியது. உவர் நீரேரிகளை எடுத்துக் கொண்டால் தென் இலங்கையின் புத்தளத்தை தவிர குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எதுவும் இல்லை. ஆனால் ஏறத்தாழ 70 சதவீத கடல்நீரேரிப் பரப்பு மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்று எங்களுடைய பகுதிகளிலேயே விரித்து கிடக்கின்றது. இதனால் நாட்டின் சதுப்பு நிலத் தாவரங்களிலும் முக்கால் பங்குக்கும் அதிகமாக இங்குதான் வளர்கின்றனபயங்கரவாதத்தை ஒழிக்க எந்ந சாத்தானுடனும் கூட்டுவைக்கத் தயார் என்ற ஜே.ஆர் ஜெயவர்த்தனா 1987ல் கடல் வலயத் தடையைக் கொண்டுவந்தார். அதற்குப் பிறகு வந்த எல்லா அரசுகளுமே. நேரத்தடை, தூரத்தடை, வேகத்தடை, பாஸ்கெடுபிடி என்று எல்லா வகைகளிலும் மீனவர்களை இறுக்கியே வந்துள்ளனர். ஒப்பந்தத்தின் பின்னரும் கூட, கடலில் தாங்கி மீன்பிடிக்கின்ற பல நாட்கலங்களை பயன்படுத்துவதற்கு எமது மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை படகுகளில் வெளி இணைப்பு இயந்திரங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட குதிரை வலுவுக்கு மேல் அனுமதியில்லை. இராணுவ ஆக்கிரமிப்புக்களினால் ஒட்டுமொத்தத் தமிழர்களும் பாதிக்கப்பட்டாலும் கூட முதலில் அகதிகளாக்கப்பட்டதும், அதிகம் அகதிகளாக்கப்பட்டதும் கரையோரப்பகுதி மக்கள்தான். கணிசமான அளவு மீனவக் குடும்பங்கள் புலம் பெயர்ந்து தமிழகத்தில் அகதி முகாம்களில் வாடிக் கொண்டிருக்க, மீதிப்பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களது கிராமங்கள் ஏறத்தாழ இராணுவக்கிராமங்களாகவே மாறிவிட்டிருக்கின்றன. குடாநாட்டில். மயிலிட்டி தொடங்கி மாதகல் வரைக்கும் மிக முக்கியமான மீன்பிடித் தளங்களில் மீன்பிடிக் குடியிருப்புக்களே இல்லை. ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னரும், கூட. இவர்கள் மீளவும் தங்கள் இடங்களில் குடியேறுவதற்கு உயர்பாதுகாப்பு வலயத்தைக் காரணம் சொல்லி இராணுவம் மறுத்து வருகிறது. மீன்பிடித் தொழிலுக்கு இன்று பெரும் தடையாக இருப்பது இந்த உயர்பாதுகாப்பு வலயம். தெற்கில் கண்ட மேடை என்ற பகுதி ஒடுங்கிக் காணப்பட வடக்கில் இது 40 கிலோ மீற்றர்கள் வரைக்கும் அகன்று செல்கின்றது. கண்ட மேடைகள் சூரிய ஒளி அதிகம் ஊடுருவும் அளவுக்கு ஆழம் குறைந்தவை என்பதால் இந்தப் பகுதிகளில் பெருவாரியாகப் பளாந்தன்கள் என்று சொல்லப்படுகிற நுண் தாவரங்கள் வாழுகின்றன. பளாந்தன்கள் கடல் உணவுச் சங்கிலியின் பிரதான உற்பத்தியாளர்களாக கடலுக்குப் போகின்றன. இதனால் கண்ட மேடைகளின் அடித்தளச் சேற்றில் கடலட்டை, இறால், சங்கு, கறுப்பு நண்டுகள் போன்ற அந்நிய செலாவாணியை ஈட்டித் தரக்கூடிய கடல் உப உணவு உயிரிகள் பெருமளவுக்கு காணப்படுகின்றன. வடக்கின் கண்ட மேடையில் உள்ள பீத்ருத் திட்டு மிகவும் பிரசித்தமானது. பருவ நிலையும் கூட எங்களுக்குத் சாதகமாகவே உள்ளன சோழகக்; காற்று அடித்து மன்னார்ப்பக்கம் தாங்கம் ஏற்படுத்தினால் அங்கிருந்து கிழக்கா வந்தும் வாடைகாற்று உரமாக வீசினால் கிழக்கில் இருந்து மேற்காகச் சென்றும் வருடம் பூராகவும் தொழில் செய்யக்கூடிய பின்னணியை இயற்கை எங்களுக்கு மட்டுமே தந்திருக்கின்றது. இந்தப் பௌதீக வளங்களுக்கும் அப்பால் மனிதவளமும் எங்களுக்குப் பலமாகவே இருக்கின்றது. 89 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இலங்கையின் கடற்தொழில் சமூகத்தில் 65 வீதமானோர், வடக்குத் கிழக்கிலேயே இருந்திருக்கிறார்கள். இந்தக் காரணிகளினாலேயே இலங்கையின் மொத்த மீனுற்பத்தியில் எமது பிரதேசங்கள் மிகப் பெருமளவு பங்களிப்பைச் செய்திருக்கின்றன. உச்சபட்சமாக 1961ல் 80 வீதமான மீனுற்பத்தி நிகழ்ந்திருக்கிறது. ஆனால் எமது பௌதீக வளமும், மனிதவளமுமாகச் சேர்ந்து முழு இலங்கைக்கும் வாரிக் கொடுத்ததை, 80களின் நடுப்பகுதிக்குப் பின்னர் ஸ்ரீலங்காவின் படைவளம் எமது மீனவர்களுக்கே மீனுக்குப் பஞ்சம் என்னும் அளவுக்கு இல்லாமற் செய்திருக்கின்றது. அந்த அளவுக்குப் போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது கடல்வளத் தொழில்தான்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
இலங்கைத் தமிழர்கள் தாய் மண்ணின் சொந்தக்காரர்கள் ------------------------------------------------------------------------- சிறீ லங்கா (முன்னை நாளில் வெள்ளையர்களால் 'சிலோன்' என அழைக்கப்பட்டது) அல்லது தமிழில் இலங்கை, ஈழம் என அழைக்கப்படுவது இந்தியாவிற்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு. இது இந்தியாவிலிருந்து ஷபாக்கு நீரிணை| மூலம் பிரிக்கப் பட்டுள்ளது. அதன் ஒடுங்கிய பகுதியின் நீளம் 22 மைல்கள் அல்லது 35.2 கிலோ மீற்றர்கள். இலங்கை அகலாங்குகளில் ஆறு பாகைக்கும், பத்து பாகைக்குமிடையிலும், நெட்டாங்குகளில் எழுபத்தியொன்பது பாகைக்கும், எண்பத்தியொரு பாகைக்குமிடையிலும் மத்திய கோட்டிற்கு மிக அண்மையிலும் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 25,332 சதுர மைல்கள், அதிலும் தமிழர்கள் தனிநாடு ஆகவே, இலங்கையில் முதலில் குடியேறியவர்கள் அல்லது இலங்கையில் முதலில் வாழ்ந்தவர்கள் யார்? இலங்கையில் வியாபாரத்திற்காக வந்த அரேபிய வர்த்தகர்கள் இலங்கைத் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்ததனாலேயே தமிழ் பேசும் ஓர் முஸ்லிம் சமுதாயம் தோன்றியதென்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இக்கேள்விக்கு தமிழர்களும், சிங்களவர்களும் வாதம் புரியலாம். இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் திருவாளர் போல் பீரீஸ், இவர் ஓர் சிங்கள வரலாற்று ஆய்வாளர், அவர் தனது கருத்தில் 'இந்தியாவிலிருந்து ஆக முப்பது மைல்கள் தூரத்திலே அமைந்துள்ள இலங்கை இந்திய மீனவர்களால் தினமும் காலையில் மீன் பிடிக்கச் செல்லும் போது காணக்கூடிய ஒரு தீவாக இருந்ததுடன் கப்பலில் பிரயாணஞ் செய்யத் தெரிந்த மக்களால் தமது குடியிருப்பிடமாக அமைத்துக் கொள்ளக் கூடிய ஓர் நிலப்பரப்பாகவும் இருந்துள்ளது. இளவரசன் விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் இந்துக் கடவுளாகிய சிவனுக்குச் சொந்தமானது என அடையாளங் காணப்பட்டதும், அகில இந்தியர்களால் பூஜிக்கப்பட்டதுமான ஐந்து ஈஸ்வரங்கள் காணப்பட்டன. அவையாவன திருக்கேதீஸ்வரம், இது மாந்தைக்கு (மகாதித்தை) அருகில் அமைந்துள்ளது, முனீஸ்வரம், இது முத்து அகழ்தலில் செல்வாக்குச் செலுத்தும் ஓர் இடமாக இருக்கிறது, தொண்டேஸ்வரம், இது மாந்தோட்ட நகரிற்கு அருகில் அமைந்துள்ளது, திருக்கோணேஸ்வரம், இது கொட்டியாரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது, நகுலேஸ்வரம், இது காங்கேசன்துறைக்கு அண்மையில் அமைந்துள்ளது. இவ்வைந்து ஈஸ்வரங்களும் துறைமுகங்களுக்கு அண்மையிலேயே அமைந்துள்ளது. எனவே இவற்றை ஓர் சபலத்தால் ஏற்பட்ட அல்லது விபத்தினால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள் என்று கூறமுடியாது. யாரோ சமயப் பற்று நிறைந்த செல்வந்த வர்த்தக கூட்டத்தால் ஒழுங்காகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப் பட்டிருக்கிறது" எனக் கூறியுள்ளார். தென்னிந்திய மீனவர்கள் இலங்கையில் குடியேறியிருக்கலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அத்துடன் பண்டைக்காலத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் ஈஸ்வரங்கள் துறைமுகங்களுக்கு அண்மையிலேயே அமைந்திருப்பதால் குடியேறிய மீனவர்கள் தம் தொழிலுக்கு வசதியாக அவ்விடத்திலேயே இருப்பிடங்களை அமைத்தும், தாம் வழிபடுவதற்காக கோயில்களையும் அமைத்தும் இருக்கலாம். அத்தோடு இப்பொழுது 30 மைல்கள் அகலத்தைக் கொண்ட பாக்கு நீரிணை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கடலரிப்புகள் குறைந்தளவில் நடைபெற்ற காலப்பகுதியில் இன்னமும் குறுகியதாகக் காணப்பட்டிருக்கலாம். இதைக் கடப்பது தென்னிந்தியர்களுக்கு பெருஞ்சிரமமாக இருந்திருக்காது. அத்துடன் தமிழர்கள் ரோமானியர்களுடன் வர்த்தகத் தொடர்புகள் வைத்திருந்தார்கள். அக்காலத்தில் ரோமாபுரியை ஆண்ட ஒகஸ்டஸ் எனும் மன்னன் தென்னிந்தியர்களுக்கு பாரிய அளவிலான கப்பல்களை வாடகைக்கு விட்டிருந்தான் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இக்கப்பல்களும் பாக்கு நீரிணையைக் கடக்க உதவியாக இருந்திருக்கலாம். ஜவகர்லால் நேரு இராவணனை திராவிடன் என்று குறிப்பட்டதிலிருந்தும், பேராசிரியர் போல் பீரீஸின் கூற்றிலிருந்தும் கிறிஸ்துவிற்கு முன் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் ஆனால் சிங்களவர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்னும் முடிவிற்கு வரலாம். கோரி (தமிழீழம்) சுதந்திரப் போராட்டம் நடாத்தும் பகுதி அல்லது தமிழர்கள் வாழும் பகுதி 7,290 சதுர மைல்கள், சிங்களவர்கள் வாழும் பகுதி 18,042 சதுர மைல்கள். இலங்கையின் சனத்தொகை 1990களில் 17,103,000 அதில் சிங்களவர்கள் 12,656,000, தமிழர்கள் 3,113,000, முஸ்லிம்கள் (பெரும்பாலானோர் தமிழ் பேசுபவர்கள்) 1,214,000 ஏனையவர்கள் 120,000. இலங்கையில் தமிழர்கள் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்கிறார்கள் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றி ஆனால் இன்று மட்டும் பேசப்பட்டு வரும் உலகின் மிகப் பழமை வாய்ந்த ஐந்து மொழிகளுள் தமிழும் ஒன்று. பண்டைய தமிழ் இலக்கியங்கள், முன்னோர்களால் கிறிஸ்துவிற்குப் பின் ஒன்று தொடக்கம் நான்காம் நூற்றாண்டுகள் வரையிலான காலப் பகுதிகளில் சங்கங்கள் வைத்து வளர்க்கப்பட்டதால் 'சங்ககால இலக்கியங்கள்' என அழைக்கப் படுகின்றன. இவை ஏறக்குறைய உலகில் 20 மெழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இலங்கையில் சிங்கள இனம், ஏறக்குறைய 2500 வருடங்களிற்கு முன் இந்தியாவின் மேற்கு வங்காள இளவரசனாகிய விஜயன் என்பவனின் வருகை மூலம் உண்டாகியது. இவன் தன்நாட்டில் செய்த சிறு பிழைக்காக நாடு கடத்தப்பட்டு ஒரு தோணி மூலம் இலங்கையை அடைந்தான். கிறிஸ்துவிற்குப் பின் ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மஹானாம எனும் புத்த பிக்கு எழுதிய மஹாவம்சம் எனும் நூலில் விஜயன் இலங்கையை அடைந்த அதே தினத்தன்றுதான் புத்தபகவான் ஞானோபதேசம் பெற்றார் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
நல்ல நண்பன் ------------------ நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனை தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது. முகத்துக்கு நேரே சிரிப்பவன், முகஸ்துதி செய்பவன், கூனிக்குழைபவன், கூழைக்கும்பிடு போடுபவன், இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான். எந்தநேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். ஆகவே ஒருவனை நண்பனாக்கிக் கொள்ளுமுன், அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும். சரியாகத் தெரிந்த பின்புதான், அவனிடம் ரகசியங்களைப் பரிமாறிக்கொள்ளவேண்டும். நன்றாக ஆராய்ந்து, ~இவன் நல்லவன்தான்| என்று கண்டபின், ஒருவனை நண்பனாக்கிக் கொண்டுவிட்டால், பிறகு அவன்மேல் சந்தேகப்படக்கூடாது. ~அவசரத்தில் ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனைச் சந்தேகிப்பதும், தீராத துயரத்தைத் தரும்| என்றான் வள்ளுவன். யாரோடு நீ பழக ஆரம்பிக்கின்றாயோ, அவனோடு நீ இனிமையாகப் பழக வேண்டும். கொஞ்ச காலத்திற்கு அதை, நீ நட்பாகக் கருதக்கூடாது. வெறும் பழக்கமாகத்தான் கருதவேண்டும். உனக்குக் கஷ்டம் வந்தபோது அவன் கைகொடுத்தால், உன்னைப்பற்றி நல்லவிதமாக, நீ இல்லாத இடத்தில் அவன் பேசுவதைக்கேள்விப்பட்டால், பிறர் உன்னைப்பற்றித் தவறாகப் பேசும்போது, அவன் தடுத்துப் பேசியதாக அறிந்தால், அவனை நீ நம்பத் தொடங்கலாம். தொடர்ந்து இது போன்ற பல செய்திகளைக் கேள்விப்பட்ட பிறகுதான், அவனை நண்பனாக நீ வரித்துக் கொள்ளவேண்டும். நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது ஒரு பழம்பாடல். பாடல் மறந்துபோய் விட்டது விளக்கம் இதுதான். ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்@ இரண்டு, தென்னைமரம் போன்றவர்கள்@ மூன்று வாழை மரம் போன்றவர்கள். பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. அது தானாகவே முளைக்கிறது. தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது. தனது உடம்பையும் ஓலையையும் நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது. நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன், பனைமரம் போன்ற நண்பன். தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்குப்பலன் தருகிறது. அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிறவன், தென்னை மரத்துக்கு இணையான நண்பன். வாழை மரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக்கவனித்தால்தான் நமக்குப் பலன் தருகிறது. அதுபோல், தினமும் நம்மிடம் உதவி பெற்றுக்கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன். இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பனே நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டிய நண்பன். பல இடங்களில் ஓரே மாதிரி ஒருவன் நடிக்க முடியாது. ஆகவே, உன் மீது அவன் வைக்கும் அன்பும் உண்மையாகத் தான் இருக்கமுடியும். நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல. ஆபத்தில் உதவுவது ஒன்றே நட்பு. நீ அழும்போது உண்மையிலேயே அவனுக்கும் அழுகை வருகிறது என்றால், அதுதான் நட்பு.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
விடலைப் பருவத்திலிருப்பவர்களின் பிரச்னைகள் என்று வந்தால் ... ------------------------------------------------------------------------------------- வளரும் பருவம், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பரவசமும் ஏற்படும் காலம். அத்துடன் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும் காலமும் கூட. இதனால் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றிலுமே ஒரு மாற்றம் காணப்படும். குறிப்பாக இந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டு பெரும்பாலும் கூச்சப்படுகிறார்கள். சிறிது தயக்கமும் அடைகிறார்கள். முகப்பரு, மாதவிடாய் பிரசினைகள், களைப்பு, பூப்படைதல், உடல் பருமன், நடத்தை, உடலியல் ரீதியான மாற்றங்கள் போன்ற விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் குவிந்துவிடுகின்றன. பாலியல் உட்பட எதைப்பற்றி வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் பேசுவதற்கு ஒரு விசேஷ வழிகாட்டியின் உதவி தேவைப்படும் பருவம் இது. அந்த விசேஷ வழிகாட்டி இல்லாதபோது குழப்பங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. குறுக்கு வழியில் பணம் பறிக்க ஆசைப்படும் சில போலி மருத்துவர்கள் தரும் தவறான விளம்பரங்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன. விடலைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நலப் பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும் வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொள்ளும் போது பிரசினைகளைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியும். குறைவாக சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் ரத்தசோகை. தாழ்வு மனப்பான்மை, படிப்பில் பின்னடைவு, அதிகப்படியான சோர்வு, மன அழுத்தம், தனிமையை விரும்புதல், சாப்பாட்டில் சமச்žரின்மை ஆகியவற்றுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். உடல் மட்டும் ஒரு மனிதனுக்கு முக்கியமில்லை. அறிவு, கடும் உழைப்பு, விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என புரியவைக்க வேண்டும். அழகு என்பது நம்மிடம் இல்லை. பார்ப்பவர்களின் கண்ணில் தான் இருக்கிறது. ஒருவருக்கு அழகற்றதாகத் தெரியும் ஒருவர், இன்னொருவருக்கு அழகாய்த் தெரிவதற்கான காரணத்தை விளக்க வேண்டும். உயரமாக இல்லை, குள்ளமாக இருக்கிறோம் என்ற கவலை அவர்களே வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு மரபுரீதியாக, உணவு பற்றாக்குறையால், ஹார்மோன் கோளாறுகளால்... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் தள்ளிப்போகும் வளர்ச்சி என்று சிலருக்கு ஆகும். சில வருடங்களுக்குப் பிறகு வேகமாக வளர்ந்து சராசரி உயரத்தை அவர்கள் அடைந்து விடுவார்கள். ஆனால் இது தெரியாததால், மனக் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். மனச் சோர்வும் ஏற்படுகிறது. பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர்கள். இது தொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம். சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்கள், சமூக, கலாசார மாறுதல்கள், உடல் மாற்றங்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளுடன் சுதந்திரமாக பேச வேண்டும். இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் கூச்சம் அடைகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள். நாமும் நம் பருவத்தில் பாதி நேரம் கண்ணாடிக்கு முன் நின்று, நம்மை நாமே ரசிப்பதிலேயே செலவிட்டவர்கள்தானே என்ற உண்மையே நினைத்துக் கொண்டாலே போதும் தயக்கம் விலகிவிடும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org